ஹைதராபாத் கடைசி நிஜாம் மீர் உஸ்மான் அலி கானின் மகன் நவாப் ஃபைசல் ஜா பகதூர், உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 72.
இதுதொடர்பாக கடைசி நிஜாமின் பேரனும், நிஜாம் குடும்ப நலச் சங்கத்தின் தலைவருமான நவாப் நஜஃப் அலி கான் கூறியதாவது:
ஹைதராபாதின் ஏழாவது மற்றும் கடைசி நிஜாமான மீர் உஸ்மான் அலி கானின் மகன் நவாப் ஃபைசல் ஜா பகதூர், கடந்த வியாழக்கிழமை திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவர் காலமானார். அவரது நல்லடக்கம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
நிஜாம் மீர் உஸ்மான் அலி கானின் மற்ற மகன்கள் அனைவரும் ஏற்கெனவே காலமாகிவிட்டனர். இப்போது நவாப் ஃபைசல் ஜா பகதூரும் மரணமடைந்துவிட்டார் என்றார் நவாப் நஜஃப் அலி கான். இந்தியா சுதந்திரம் அடைந்த பின், இந்தியாவுடன் இணைய ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலி கான் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, ராணுவ நடவடிக்கை மூலம் ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.