224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நேரில் சென்று பிரசாரத்தில் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுலை 'பச்சா' (குழந்தை) என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா விமரிசித்துள்ளார். மேலும் அவர் வருகை தந்ததால் சுமார் 150 தொகுதிகள் வரை பாஜக வெற்றிபெறுவது உறுதி எனவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து கர்நாடக பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா கூறியதாவது:
ஊழலை ஒழிப்பதில் காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த இந்த 70 ஆண்டுகளில் மக்கள் இன்றும் குடிசைப் பகுதிகளில் வாழும் அவல நிலை தொடர்கிறது.
ஏனென்றால் இதுவரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி மக்களின் வாழ்வாதார மேம்பாடு தொடர்பாக அக்கறை காட்டவில்லை. இதை நாங்கள் அரசியல் லாபத்துக்காக கூறவில்லை. உண்மையிலேயே அனைவிரன் வாழ்வாதாரமும் மேம்பட வேண்டும் என்பதே எங்களின் பிரதான நோக்கம்.
தற்போது அந்த 'பச்சா' (ராகுல்) இங்கு வந்தபோதே தெரியும், நாங்கள் சுமார் 150 தொகுதிகளுக்கும் மேல் உறுதியாக வெற்றிபெற்று விடுவோம் என்றார்.