அயோத்யா: அயோத்தி ரயில்வே நிலையத்தினை ராமர் கோவில் வடிவத்தில் மறுசீரமைப்பு செய்ய உள்ளதாக மத்திய இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் செவ்வாயன்று ரூ.200 கோடி மதிப்புள்ள பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். அந்த திட்டங்களில் ரூ.80 கோடி செலவில் அயோத்தி ரயில்வே நிலையத்தை மறு சீரமைப்பு செய்யும் திட்டமும் அடக்கம். இது தொடர்பாக அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:
அயோத்தி ரயில்வே நிலையத்தினை ராமர் கோவில் வடிவத்தில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்திற்கான முன் வரைவானது, ரயில்வே அமைச்சகம் சார்பில் மத்திய அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தியை முறையான ரயில்வே திட்டங்கள் மூலம் தொடர்பு படுத்துவதில் இந்த அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ராம பகதர்கள் இங்கு வருகை தருவது எளிதாக இருக்கும்.
அயோத்தி ரயில்வே நிலைய மறுசீரமைப்பு தொடர்பான திட்டமானது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலிருந்தே திட்டமிடப்பட்டு வந்தது. உருவாக உள்ள ரயில்வே நிலையமானது எல்லா விதமான நவீன வசதிகளையும் கொண்டதாக அமைந்திருக்கும்.
இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தவுடன் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கு,ம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.