லக்னௌ: இன்னும் மூன்று ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் படிப்படியாக ரூ.10000 கோடி முதலீடு செய்யப்படும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி புதன்கிழமை உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் ஜியோ ஏற்கனவே ரூ.20000 கோடி முதலீடு செய்துள்ளது. வரக்கூடிய மூன்று ஆண்டுகளில் இன்னும் ரூ. 10000 கோடி தலீடு செய்யத் திட்டமிட்டுள்ளோம். இந்த வருட இறுதிக்குள் மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் ஜியோவைக் கொண்டு சேர்ப்பதே எங்கள் இலக்கு.
இந்தியாவின் பிரபல மாநிலமான உத்தரப் பிரதேசத்திற்கு என இரண்டு கோடி ஜியோ போன்கள் உற்பத்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
உத்தரப் பிரதேசம் எழுந்து நின்று ஓட ஆரம்பித்தால், இந்தியா உலகளாவிய பெரும் சக்தியாக உருவெடுப்பதை யாராலும் தடுக்க இயலாது. எனவே வளர்ச்சியின் பாதையில் முதலீடுகள் மூலம் நாங்களும் பங்கு பெற விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்