ஜாம் நகர்: போர் விமானம் ஒன்றை தனியாக ஓட்டி சாதனை படைத்த முதல் இந்திய பெண் விமானி என்ற பெருமையை அவனி சதுர்வேதி நிகழ்த்தியுள்ளார்.
பல்வேறு கட்ட தடைகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்திய விமானப்படையில் பெண்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு போர் விமானங்களை இயக்குவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பல கட்ட ஆரம்ப பயிற்சிகளுக்குப் பின் அவர்கள் குழுவாக தேர்வு செய்யப்படுகின்றனர். பின்னர் அவர்களுக்குத் தனியாக போர் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தில் அவனி சதுர்வேதி, பாவனா காந்த், மோகனா சிங் ஆகிய மூன்று பெண் விமானிகளுக்கும் போர் விமானத்தை தனியாக ஓட்டுவதற்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வந்தது. இவர்கள் மூவரும் 'மிக் -21' பைசன் ரக விமானத்தில் பயிற்சி பெற்று வந்தனர்.
இவர்கள் மூவரில் அவனி சதுர்வேதி புதனன்று தனியாக போர் விமானத்தை வெற்றிகரமாக ஓட்டி சாதனை படைத்தார். இதன் மூலம் போர் விமானம் ஒன்றை தனியாக ஓட்டி சாதனை படைத்த முதல் இந்திய பெண் விமானி என்ற பெருமையை அவனி சதுர்வேதி நிகழ்த்தியுள்ளார்.