மும்பை: பேஸ்புக் லைவில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் சிறுமிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த பிரபல பாடகர்-மீது குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'வாய்ஸ் இந்தியா கிட்ஸ்' என்ற சிறுவர் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பாடகர்கள் ஷான், ஹிமேஷ் ரேஷமய்யா மற்றும் பாடகரும்-இசையமைப்பாளருமான பாபன் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றி வருகின்றனர்.
வாய்ஸ் இந்தியா கிட்ஸ் போட்டியாளர்களுடன் நடுவர்கள் ஹோலி கொண்டாடும் வகையில் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. அதை பாபன் தனது பேஸ்புக் பக்கத்தில் 'லைவ்' செய்திருந்தார். அப்பொழுது பாபன் ஒரு சிறுமியின் முகத்தில் வண்ணப்பொடியைத் தடவினார். அப்பொழுது பாபன் திடீர் என்று அந்த சிறுமியின் உதட்டில் முத்தம் கொடுத்தார். இதை சற்றும் எதிர்பாராத அந்த சிறுமி அதிர்ச்சி அடைந்து தடுமாறினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
அந்த வீடியோவை பார்த்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரூனா புயான் என்பவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக மைனர் சிறுமிக்கு உதட்டில் முத்தம் அளித்ததன் மூலம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, பாபன் மீது தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்தார்