தொழிலதிபர் நீரவ் மோடியின் நிறுவனத்துடனான விளம்பர ஒப்பந்தத்தை பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா ரத்து செய்துள்ளார். இதுதொடர்பான தகவலை அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடன் ஏய்ப்பு முறைகேடு புகாரில் சிக்கியுள்ள நீரவ் மோடி மீது பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பிரியங்கா சோப்ரா இத்தகைய முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்தும், அதன் பெயரைப் பயன்படுத்தி வேறு சில வங்கிககளிடம் இருந்தும் 11,400 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் நீரவ் மோடி தற்போது இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார். நீரவ் மோடி மீதும், அவரது உறவினர் மெஹல் சோக்ஸி மீதும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரை நாடு கடத்தி தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நீரவ் மோடியின் நிறுவனத்துக்கு விளம்பரத் தூதராக உள்ள பிரியங்கா சோப்ரா, அதுதொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இதன் மூலம், வரும் நாள்களில் அவரது புகைப்படங்களோ அல்லது அவர் நடித்த விளம்பரங்களையோ நீரவ் மோடி நிறுவனம் காட்சிப்படுத்த இயலாது.
நீரவ் மோடி நிறுவனத்தின் மற்றொரு விளம்பரத் தூதராக இருந்த பிரபல ஹிந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுடனான ஒப்பந்தமும் ஏற்கெனவே நிறைவடைந்து விட்டதால் அவரது புகைப்படங்களையும் விளம்பரங்களுக்கு பயன்படுத்த இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.