புதுதில்லி: கேரள பழங்குடியின வாலிபர் மது அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சர்ச்சைக்குரிய தனது ட்வீட்டுக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பகிரங்க மன்னிப்புக் கேட்டார்.
கேரளாவில் அட்டப்பாடி பகுதி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் மது. மனநிலை பாதிக்கப்பட்டவர். இரு நாட்களுக்கு முன்னர் உணவுக்காக அரிசி திருடினார் என்று குற்றம் சாட்டி மதுவை உள்ளூர் மக்கள் அடித்துக் கொன்றனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 16 பேரை கேரளா போலீஸ். கைது செய்தது.
இந்த கொலை விவகாரத்தில் வட இந்திய ஊடகங்கள் முஸ்லிம் நபர்கள் இருவரைக் குறிப்பிட்டு செய்தி வெளியிருந்தன. இந்நிலையில் இந்த கொடூர சம்பவத்தினைக் கண்டித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அப்பொழுது அவர் “மது ஒருகிலோ அரிசையைத் திருடி விட்டார். உபைத், ஹுசைன், அப்துல் கரீம் ஆகியோர் அடங்கிய கும்பல் அந்த ஏழை பழங்குடியை கொலை செய்துள்ளது, இந்த சம்பவம் நாகரிக சமூகத்திற்கு பெரும் இழுக்கு; வெட்கக்கேடு” என்று கருத்தினைப் பதிவு செய்திருந்தார்.
அதில் இந்த சம்பவத்திற்கு காரணமாக அந்த இருவர் பெயரை மட்டும் அவர் குறிப்பிட்டது கடுமையான சர்ச்சையைக் கிளப்பியது.
இதற்கு சமூகவலைத்தளங்களில் கொந்தளிப்பு எழுந்தது. பலரும், 'அது எப்படி 16 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கும் போது முஸ்லிம்கள் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு குற்றம் சாட்டலாம்?' என்று சேவாகைக் நோக்கி கேள்விகளை எழுப்பியிருந்தார்கள் .
இதனால் சேவாக் மன்னிப்பு கேட்டு மற்றொரு ட்வீட்டை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்தாவது
தவறை ஒப்புக் கொள்ளாதது இரண்டாவது தவறு. பிற பெயர்களைக் குறிப்பிடாமல் விட்டது தவறுதான். காரணம் இது குறித்த முழுமையான தகவல்கள் இல்லை. எனவே நான் மனம்திறந்து உள்ளபடியே மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அந்த ட்வீட் மதச்சாயம் கொண்டதல்ல.
இவ்வாறு சேவாக்.அதில் தெரிவித்திருந்தார்.