இனிப்பு வகைகளில் ஒன்றான ரசகுல்லாவுக்கு, "ஒடிஸா ரசகுல்லா' என்ற பெயரில் புவிசார் குறியீடு வழங்கக் கோரி அந்த மாநில அரசு விண்ணப்பித்துள்ளது.
அதற்காக, சென்னையில் உள்ள புவிசார் குறியீடு பதிவு அலுவலகத்தில் ஒடிஸா மாநில சிறுதொழில் துறை கழகத்தின் (ஓஎஸ்ஐசி) மேலாண் இயக்குநர் ரத்னாகர் ராவத் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தார்.
வட மாநிலங்களில் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்றான ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு பெறுவதில் ஒடிஸாவுக்கும், மேற்கு வங்கத்துக்கும் இடையே கடும்போட்டி நிலவி வந்தது. இரு தரப்பும், ரசகுல்லாவின் பிறப்பிடம் தங்கள் மாநிலம்தான் என்று வாதிட்டு வந்தன. இறுதியில் ரசகுல்லாவுக்கு மேற்கு வங்க அரசு கடந்த நவம்பர் மாதம் புவிசார் குறியீட்டைப் பெற்றது. இதனால் ஒடிஸா மக்கள் அதிருப்தியடைந்தனர்.
அதையடுத்து, ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பிக்கப் போவதாக, ஒடிஸா அமைச்சர் பிரஃபுல்லா சமல் கூறியிருந்தார்.
இதேபோல், ரசகுல்லாவுக்கு பிறப்பிடம் ஒடிஸா தான் என்றும், 12-ஆம் நூற்றாண்டில் இருந்தே ஜகந்நாதர் கோயிலில் அந்த இனிப்பு வகை படைக்கப்பட்டு வந்தது என்றும் முதல்வர் நவீன் பட்நாயக் கூறியிருந்தார்.