தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள் மீது ரயில் மோதி 6 இளைஞர்கள் பலி
லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நேற்று தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள் மீது ரயில் எஞ்சின் மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹபூர் மாவட்டம் பில்குவா ரயில் நிலையத்தில் சர்வோதயா நகர் பகுதியை சேர்ந்த 7 வாலிபர்கள் நேற்று தண்டவாளத்தை கடக்க முயன்ற போது லோகோமோடிவ் ரயில் வருவதை கண்டு அதிரிச்சியுடன் தண்டவாளத்திலேயே நின்ற அவர்கள் மீது ரயில் எஞ்ஜின் மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் மோசமான நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களில் ஆரிப் (18), சலீம் (20), சமீர் (15), விஜய் (18) மற்றும் ஆகாஷ் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராகுல் என்பவரும் உயிரிழந்தார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.
தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள் மீது ரயில் எஞ்சின் மோதிய விபத்தில் ஒரே பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.