லக்னௌ: உத்தர பிரதேசத்தில் 'லஷ்கர் இ தொய்பா' என்னும் வாட்ஸப் குழுவில் சேருமாறு அழைப்பு வந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த இளைஞர் ஒருவர் சைபர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவில் இளைஞர் ஒருவருக்கு அவர் உறுப்பினராக உள்ள வாட்ஸப் குழுவில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அது 'லஷ்கர் இ தொய்பா' என்னும் வாட்ஸப் குழுவில் சேருமாறு வந்த அழைப்பாகும். இதனால் அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இளைஞரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் தீவிரவாத தடுப்பு பிரிவினருக்கும் இது பற்றி உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையின் ஆரம்ப கட்ட விசாரணையில் அந்த குழுவானது ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாடா மாவட்டத்தைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவனால் உருவாக்கப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.