நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.), எம்எல்ஏக்கள் ஆகியோர் தொடர்புடைய குற்ற வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக தில்லி உயர் நீதிமன்றம் 2 சிறப்பு நீதிமன்றங்களை அமைத்துள்ளது.
இந்த நீதிமன்றங்களுக்கு தலைமை தாங்குவதற்கு சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் சமர் விஷால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று தில்லி உயர் நீதிமன்ற தாற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் இதர நீதிபதிகள் சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்தினர்.
தில்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் மார்ச் 1-ஆம் தேதி முதல் சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படும் என்று உயர் நீதிமன்ற பதிவாளர் தினேஷ் குமார் சர்மா கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க ஏதுவாக 12 சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
மார்ச் 1-ஆம் தேதி முதல் இந்த நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.