காலதாமதமாகி வரும் 213 ரயில்வே திட்டங்களால், மத்திய அரசுக்கு ரூ.1.73 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மத்திய அரசால் 349 ரயில்வேத் திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களின் செயல்பாடுகளை மத்திய புள்ளியியல் அமைச்சகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆய்வு செய்தது.
அப்போது 349 திட்டங்களில், 213 திட்டங்கள் பல்வேறு காரணங்களினால் காலதாமதமாகி வருவது தெரிந்தது. இந்த காலதாமதத்தால், மத்திய அரசுக்கு ரூ.1.73 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அரசால் இந்த 213 திட்டங்களுக்கும், ரூ.1.23 லட்சம் கோடி செலவு ஆகும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களினால் இந்தத் திட்டங்கள் தாமதமானதால், இதன் செலவு தற்போது ரூ.2.96 லட்சம் கோடியாக அதிகரித்து விட்டது. அதாவது, செலவுத் தொகையானது 140.85 சதவீதம் உயர்ந்து விட்டது. காலதாமதமாகும் 213 திட்டங்களில், 36 திட்டங்களை மட்டும் செயல்படுத்தி முடிப்பதற்கு 12 மாதங்கள் முதல் 261 மாதங்கள் காலதாமதமாகியுள்ளன.
ரயில்வேக்குப் பிறகு, மின்சாரத் துறை திட்டங்களால் அரசுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. மின்சாரத் துறையால் செயல்படுத்தப்படும் 126 திட்டங்களில் 43 திட்டங்கள் காலதாமதமாகி வருவதால், அரசுக்கு ரூ.58,728 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த 43 திட்டங்களை செயல்படுத்தி முடிப்பதற்கு, ரூ.1.04 லட்சம் கோடி செலவு ஆகும் என்று அரசால் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், காலதாமதமானதால் இத்திட்டங்களின் செலவு ரூ.1.63 லட்சம் கோடியாக அதிகரித்து விட்டது.
126 மின்சாரத் திட்டங்களில், 64 திட்டங்கள் மட்டும், 2 மாதம் முதல் 136 மாதங்கள் வரையிலும் காலதாமதமாகியுள்ளன என்று அந்த புள்ளி விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.