மாநிலங்களவையில் தனது கட்சிக்கு ஓரிடம் தரக்கோரி, மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு பிகார் மாநில முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சித் தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி திடீர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிகார் மாநிலம், கயையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
மாநிலங்களவையில் காலியாகும் 58 இடங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் பிகார் மாநிலத்தில் உள்ள 6 இடங்களும் அடங்கும். அந்த 6 இடங்களில் ஒரு இடத்துக்கு ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சித் தலைவரின் பெயரை தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்க வேண்டும்.
அவ்வாறு, தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்கவில்லையெனில், இடைத் தேர்தல்களில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எனது கட்சித் தொண்டர்கள் பிரசாரம் செய்ய மாட்டார்கள்.
பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் வகையில், எனது கட்சி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஓய்வின்றி பணியாற்றியுள்ளது. எனவே மாநிலங்களவையில் ஓரிடம் கோருவது தவறில்லை என்றார் ஜிதன் ராம் மாஞ்சி.
பிகார் முன்னாள் முதல்வரான ஜிதன் ராம் மாஞ்சி, முதல்வர் நிதீஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி எனும் புதிய அரசியல் கட்சியை ஜிதன் ராம் மாஞ்சி தொடங்கினார்.
பின்னர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் மாஞ்சி போட்டியிட்டார். ஆனால், பிகார் தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வியைச் சந்தித்தது.