லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானா மாநகராட்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்று வெற்றி முகத்தில் இருக்கிறது.
பஞ்சாபில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. எதிர்த்துப் போட்டியிட்ட அகாலிதளம் - பாஜக கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் லூதியானா மாநகராட்சியில் கடந்த சனிக்கிழமை உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் செவ்வாயன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் மாலை நிலவரப்படி மாநகராட்சியில் மொத்தமுள்ள 95 வார்டுகளில் 62 இடங்களில் ஆளும் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. அகாலிதளம் 11 இடங்களிலும், பாஜக 10 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
இதன் காரணமாக அகாலிதளம் - பாஜக கூட்டணி வசம் இருந்த லூதியானா மாநகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றும் நிலையில் உள்ளது.