புதுதில்லி: இஸ்லாமியர்களின் புனித ஹஜ் பயணத்துக்கான விமானக் கட்டணங்கள் 35% வரை குறைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் மெக்காவுக்கு செல்வது என்பது இஸ்லாமியர்களின் ஐந்து புனித கடமைகளில் ஒன்றாகும். இந்தியாவில் இருந்து கடந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்லும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 25 ஆக உயர்ந்தது.
முன்னதாக ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் ஒரு நபருக்கு சுமார் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்வரை மானியமாக அளிக்கப்பட்டு வந்தது. அதன்படி இந்த ஆண்டில் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரைக்கு செல்லவுள்ள நிலையில் இதற்காக சுமார் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
ஆனால் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு ஏற்ப இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா நாட்டுக்கு ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் அளிக்கப்படும் மானியத் தொகை இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக கடந்த 16-1-2018 அன்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் ஹஜ் பயணத்துக்கான விமானக் கட்டணங்கள் 35% வரை குறைக்கப்பட்டிருப்பதாக புதுதில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.