ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், லண்டனில் இருந்து திரும்பியபோது சென்னை விமான நிலையத்தில் சிபிஐ-யால் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாஜக-வின் முக்கிய தலைவரும், எம்பி-யுமான சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது:
இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று நான் நம்புகிறேன். இது சிபிஐ-யின் தலைசிறந்த சாதனையாகும். இவ்விவகாரத்தில் முறையான ஒத்துழைப்பு அளிப்பதற்காக கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ போதிய கால அவகாசம் அளித்தது.
ஆனால், அவைகள் அனைத்தையும் கார்த்தி புறக்கணித்துவிட்டார். மேலும் தவறான தகவல்கள் மற்றும் வாக்குமூலங்களையும் அளித்துள்ளார். தன்மீது போதிய ஆதாராங்களுடன் சரியான குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் இந்த வழக்கில் பல பொய்களை கூறி வழக்கின் போக்கை திசை திருப்ப நினைத்தார். ஆனால் தற்போது சிறைச்செல்லப்போகிறார் என்றார்.
முன்னதாக, 2007-ஆம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுக்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உடந்தையாகச் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ-யும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இதனிடையே, ஐஎன்எஸ் மீடியாவின் கருப்புப் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனின் அமலாக்கத் துறையின்காவல் மேலும் 3 நாள்களுக்கு நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.