புதுதில்லி: நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அரசின் சார்பாக குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தில், இனி பாலையும் சேர்த்துக் கொள்ளுமாறு மத்திய வேளாண் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தற்பொழுது அந்த சத்துணவில் ஊட்டச்சத்து அளவினை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. எனவே இனி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தில், பாலையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அந்த அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடிதத்தில் இது வெறும் அறிவிப்பாகவே கூறப்பட்டுள்ளது. எனவே இதனை மாநில அரசுகள் எப்பொழுது செயல்படுத்தும் என்று தெரியவில்லை