புதுதில்லி: ராணுவ வீரர்கள் என்றால் சாகத்தான் வேண்டும் என்ற தனது பேச்சிற்கு ராம்பூர் தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்.பி நேபால் சிங் மன்னிப்பு கோரியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்.பியாக இருப்பவர் நேபால் சிங். இவர் செவ்வாயன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது சமீபத்தில் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவ அத்துமீறலால் மரணமடைந்த இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் சி.ஆர்.பி.எப் முகாம் மீது நடந்த தாக்குதல்குறித்து பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
ராணுவத்தில் வீரர்கள் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் இறக்கத்தான் வேண்டும். எந்த நாட்டிலாவது சண்டையின் பொழுது ராணுவ வீரர்கள் இறக்காமல் இருந்துள்ளார்களா? சாதாரணமாக கிராமத்தில் ஒரு சண்டை நடந்தாலே ஒருவருக்காவது அடி படத்தான் செய்யும். மனிதர்கள் இறக்காமல் இருப்பதற்கு ஏதேனும் உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவா? பாய்ந்து வரும் தோட்டாவைத் தடுத்து நிறுத்தும் கருவி ஏதேனும் உண்டா?
இவ்வாறு அவர் பேசினார். அவரின் இந்த பேச்சு குறித்த தகவல் வெளியாகிப் பெரும் சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது. பின்னர் இது தொடர்பாக விளக்கமளித்த நேபால் சிங் மன்னிப்பு கோரியுள்ளார். அப்பொழுது அவர் கூறியதாவது:
நான் ராணுவத்தின அவமரியாதை செய்ய எண்ணவில்லை. நான் சோகமாக உணர்கிறேன். என்னுடைய கருத்துக்கு வருந்துகிறேன். ஆனால் நான் அப்படி எதுவும் கூற எண்ணவில்லை விஞ்ஞானிகள் அத்தகைய ஒரு கருவியினை கண்டுபிடித்தால், புல்லட் தாக்குதலில் இருந்து வீரர்களை காப்பாற்றலாம் என்றுதான் கூறினேன். .
இவ்வாறு அவர் தெரிவித்தார்.