ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மீதான கருப்புப் பணத் தடுப்புச் சட்ட வழக்கில் ரூ.117.74 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இது தொடர்பாக ஹைதராபாத் நகர அமலாக்கத்துறை அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது:
ஜெகன்மோகன் ரெட்டி மீது கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கில் அவருடன் தொடர்புடைய இந்து புராஜக்ட்ஸ், எம்பஸி பிராபர்ட்டி டெவலப்பர்ஸ், வசந்தா புராஜக்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் ரூ.117.74 கோடி மதிப்புள்ள அசையும், அசையாத சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, கடந்த 2004-ஆம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி மீது கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்தார். சிறப்புப் பொருளாதாரத் திட்டம், சுரங்கம் அமைத்தல், ரியல் எஸ்டேட் என பல்வேறு துறைகளில் தனியார் நிறுவனங்களுக்கு அப்போதைய ஆந்திர அரசு சாதகமாக முடிவெடுத்தது. அதற்கு பிரதிபலனாக ஜெகன்மோகன் ரெட்டியின் நிறுவனத்துக்கு முதலீடுகள் வந்தன என்பது முக்கியக் குற்றச்சாட்டாகும்.