வரி ஏய்ப்பு வழக்கு: சுரேஷ் கோபியை கைது செய்யத் தடை: கேரள உயர் நீதிமன்றம்
வரி ஏய்ப்பு செய்ததாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், மலையாள நடிகரும், பாஜக எம்.பி.யுமான சுரேஷ் கோபியை கைது செய்வதற்கு 10 நாள்களுக்கு தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுவை மாநிலத்தில் இருப்பிடம் இருப்பதாக போலியான ஆவணத்தை தயாரித்து, விலையுயர்ந்த காரின் பதிவை அந்த மாநிலத்தில் செய்து வரி ஏய்ப்பு செய்ததாக சுரேஷ் கோபி மீது கேரள போலீஸார் கடந்த மாதம் 5ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் சுரேஷ் கோபி கடந்த மாதம் 12ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர், 'என் மீது போலீஸார் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. புதுவையில் 2 கார்களை நான் பதிவு செய்துள்ளேன். புதுவையில் எனக்கு விவசாய நிலம் இருக்கிறது. அதை எனது சகோதரர்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் நிர்வாகம் செய்து வருகின்றனர்' எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு, கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜா விஜயராகவன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வாதாடிய வழக்குரைஞர், கேரளத்தில் வரி ஏய்ப்பு செய்துவிட்டு, இந்த மாநிலத்திலே தனது காரை சுரேஷ் கோபி ஓட்டுகிறார் என்று குற்றம்சாட்டினார்.
இதையடுத்து நீதிபதி கூறுகையில், 'முன்ஜாமீன் கேட்டு சுரேஷ் கோபி தாக்கல் செய்துள்ள மனுவை கவனத்தில் கொண்டு, இந்த வழக்கில் 10 நாள்கள் வரையிலும் அவரைக் கைது செய்யக் கூடாது என உத்தரவிடப்படுகிறது' என்றார்.
பின்னர் மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 9ஆம் தேதிக்கு நீதிபதி ராஜா விஜயராகவன் ஒத்தி வைத்தார்.
கேரள உயர் நீதிமன்றம் முந்தைய உத்தரவில், சுரேஷ் கோபி விசாரணையின்போது ஆஜராகியிருக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. அதையேற்று, உயர் நீதிமன்றத்தில் சுரேஷ் கோபி புதன்கிழமை நேரில் ஆஜரானார்.