குருகிராம்: குருகிராம் ரயான் சர்வதேச பள்ளியில் பயின்ற 2-ம் வகுப்பு மாணவர் பிரத்யும்னனை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள 11-ம் வகுப்பு மாணவனுக்கு ஜாமீன் வழங்க, இரண்டாவது முறையாக நீதிமன்றம் மறுத்து விட்டது.
கைதான சிறுவனின் ஜாமீன் மனு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தின் நீதிபதி ஜஸ்பீர் சிங் குன்ட்டு முன் முதன் முறையாக கடந்த மாதம் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட மாணவருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்ட மாணவன் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 8-ம் தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டார்.
அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மாணவனின் ஜாமீன் மனுவினை இரண்டாவது முறையாக நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 11-ம் வகுப்பு மாணவன், சிறார் கூர்நோக்கும் இல்லத்தில் தனது 21-ம் வயது வரை இருக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் தான் அவரை சிறைக்கு அல்லது ஜாமீன் வழங்குவது குறித்து நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்றும் சிறார் நீதி வாரியம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.