இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவனை கொலை செய்ததாக அவனது ட்யூஷன் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே உள்ள பைராகரினைச் சேர்ந்தவர் பரசுராம். இவரது மகன் பரத் மஹாவர். இரண்டாம் வகுப்பு மாணவன். இவனுக்கு வீட்டிற்கு வந்து பாடம் எடுக்கும் ட்யூசன் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் விவேக் ருபானி.
இந்நிலையில் மாணவன் பரத்தினை திங்களன்று மதியம் முதல் அவன் படித்து வந்த கிரைஸ்ட் மெமோரியல் பள்ளியில் இருந்து காணவில்லை. இதனைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு மாணவன் பரத்தின் உயிரற்ற உடல், இந்தூர் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஒன்றின் அருகே சாக்கில் கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக பரத்தின் தந்தை பரசுராம் கூறியதாவது:
பரத்திற்கு வீட்டிற்கு வந்து வகுப்புகள் எடுத்த விவேக் மீது சந்தேகப்படும் வகையில் சில புகார்கள் வந்ததால், அவரை வீட்டிற்கு வரவேண்டாம் என்று கூறி விட்டேன். அதனைத் தொடர்ந்து பிறகு ஒரு நாள் அதிகாலை 3 மணி அளவில் தனது வீட்டிற்குள் புகுந்த விவேக், என் மகன் பரத்தினை கடத்தப் போவதாகவும், எனது குடும்பத்தினை பழி வாங்குவேன் என்றும் மிரட்டினார். இது தொடர்பாக பைராகர் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு எடுக்கப்பட்டிருந்தால், இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது.
இவ்வாறு பரசுராம் தெரிவித்தார்.
இதனிடையே போலீசார் விவேக்கினை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தற்பொழுது மாணவன் பரத்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.