மும்பை: இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் ரயில் நிலையம் என மும்பை மாதுங்கா ரயில்வே ஸ்டேஷன் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் மத்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் ரயில்வே நிலையங்களில் மும்பையின் மாதுங்காவும் ஒன்று. மத்திய ரயில்வேயின் பொது மேலாளரான ஷர்மாவின் முன் முயற்சியின் காரணமாக,கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ரயில் நிலையமானது முழுக்க முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது.
ரயில் நிலைய பாதுகாப்பில் ஈடுபடும் ரயில்வே பாதுகாப்பு படையினரில் துவங்கி, வணிக ரீதியிலான அலுவல்கள் மற்றும் நிலையச் செயல்பாடுகள் என அனைத்திலும் முழுக்க மகளிரே ஈடுபட்டுள்ளனர். மொத்தமாக 41 பெண்கள் இந்த ரயில் நிலையத்தை நிர்வகித்து வருகின்றனர்.
தற்பொழுது இந்த ரயில் நிலையமானது இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் ரயில் நிலையம் என லிம்கா சாதனைப் புத்தகத்தில் 2018-ஆம் ஆண்டுப் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தகவலை மத்திய ரயில்வே துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிட பகிர்ந்து கொண்டார். இந்த முடிவானது மகளிர் மேபாடு மற்றும் முடிவெடுக்கும் திறனில் அவர்களது தனித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.