குடியரசு தின விழாவில் முதல் முறையாக ஆசியான் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
ஆசியான்-இந்தியா இடையேயான நட்புறவு தொடங்கி 25 ஆண்டுகள் ஆவதை நினைவுகூறும் வகையில், வரும் 25-ஆம் தேதி தில்லியில் ஆசியான் மாநாடு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செயலர் பிரீத்தி சரண் கூறியதாவது:
முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக குடியரசு தின விழாவில் ஆசியான் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு கடந்த வாரம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
இந்தப் பயணம் ஆசியான் மாநாட்டை நடத்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. வரும் 24-ஆம் தேதி ஆசியான் தலைவர்கள் இந்தியா வருகின்றனர். 25-ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் பயங்கரவாத விவகாரம், பாதுகாப்பு, வர்த்தகம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும். அத்துடன், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் கலந்தாலோசனை நடத்தப்படும் என்று பிரீத்தி சரண் தெரிவித்தார்.
தாய்லாந்து, வியத்நாம், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், மியான்மர், கம்போடியா, லாவோஸ், புரூணே ஆகிய நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பு ஆசியான் என்று
அழைக்கப்படுகிறது.