புதுதில்லி: நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ள நீதிபதிகள் - பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப் மற்றும் மதன் பி லோகூர் ஆகிய நால்வரும், வெள்ளியன்று காலை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது, ' உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை; ஜனநாயகத்தன்மை பேணப்படவில்லை' என்று கூட்டாக பேட்டியளித்தனர். நாட்டின் நீதித்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக இவ்வாறு நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அத்துடன் தங்களது கவலைகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலையும் நீதிபதிகள் கூட்டாக வெளியிட்டனர். அதேசமயம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக நான்கு நீதிபதிகள் போர்க்கொடி தூக்கியுள்ள விவகாரம் தொடர்பாக முன்னாள் நீதிபதிகள் பலரும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ள நீதிபதிகள் - பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பொதுவாக நாம் நீதிபதிகளை விமர்சனம் செய்ய முடியாது. அவர்கள் அதிகமான கண்ணியம் கொண்டவர்கள், அவர்கள் சட்டத்தின் வழி நீதி பரிபாலனத்திற்கு வாழ்க்கையையே தியாகம் செய்து உள்ளனர், அவர்கள் மூத்த வழக்கறிஞர்கள் போன்று பணம் சம்பாதிக்க முடியாது. அவர்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பும் ஒருமித்த கருத்திற்கு வந்து, தொடர்ந்து செயல்படுவதை பிரதமர் மோடி இதில் தலையிட்டு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.