இளம் தொழில் முனைவோருக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும்; இளைஞர்கள், புதுமையான வழியில் சிந்தித்து, தொழில் முனைவோராக உருவாக வேண்டும்' என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள கெளதம் புத்தா பல்கலைக்கழகத்தில் 22-ஆவது தேசிய இளைஞர் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. பிரதமர் மோடி, தில்லியில் இருந்தபடி விடியோ காணொலி முறையில் விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:
இளைஞர்கள் பொறுமையாக இருக்க வேண்டியது நல்ல குணம்தான். ஆனால், அதுவே அவர்கள் புத்தாக்க சிந்தனையுடன் வளர்வதைத் தடுப்பதாக இருக்கக் கூடாது. இளைஞர்களின் சிந்தனையால், இந்தச் சமூகமும், நாடும் பயன் பெறும்.
அதற்காக, இளைஞர்களாகிய நீங்கள் தொழில் முனைவோராக உருவாக வேண்டும். நீங்கள் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து, அதில் முழு மூச்சாக இறங்கிவிட்டால், அரசு உங்களுக்கு ஆதரவு அளிக்கும்.
வங்கிக் கடன், வங்கி உத்தரவாதம், அலுவல் சார்ந்த நடைமுறைகள் ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு அளிக்கும். அதற்காக, முத்ரா கடனுதவி திட்டம், திறன் இந்தியா (ஸ்கில் இந்தியா), தொடங்கிடு இந்தியா (ஸ்டார்ட் அப்) போன்ற திட்டங்களின் மூலமாக கடனுதவி அளிக்கப்படும் என்றார் மோடி.
விழாவில் கலந்து கொண்ட உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
இளைஞர்களாகிய நீங்கள், இந்த நாட்டின் சக்தியின் அடையாளமாக விளங்குகிறீர்கள். புத்தாக்க சிந்தனை கொண்ட இளைஞர்களால் மட்டுமே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இளைஞர்களின் சிந்தனைகளை மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்த முடியும். ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பது முக்கியமல்ல. அவர் எப்படி வாழ்கிறார்? இந்தச் சமூகத்துக்கு எப்படி பயன்படுகிறார்? என்பதே முக்கியமாகும் என்றார் அவர்.