உலகத் தலைவர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'கல்லப் இண்டர்நேஷனல்' என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம் நடத்திய உலக நாடுகளின் தலைவர்கள் பற்றிய ஆய்வில், பிரதமர் மோடி 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமித் ஷா, இதுதொடர்பாக, தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, அமைப்பு ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சீர்திருத்தங்கள் அனைத்தையும் உலக நாடுகள் உற்று நோக்கி கவனித்து வருகின்றன என்பதையே கல்லப் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஆய்வு முடிவு தெளிவுபடுத்துகிறது.
சர்வதேசத் தலைவர்கள் வரிசையில் மோடி இடம்பெற்றதை அடுத்து, அவர் மீதான நம்பிக்கை ஒவ்வொரு இந்தியருக்கும் மேலும் அதிகரித்துள்ளது என்று அமித் ஷா தனது சுட்டுரைப் பக்கத்தில்
குறிப்பிட்டுள்ளார்.