இந்தியக் கடற்படை சேவைகளில் இருந்து 'ஐஎன்எஸ் நிர்பிக்', 'ஐஎன்எஸ் நிர்கத்' ஆகிய போர்க் கப்பல்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 30 ஆண்டுகளாக பல்வேறு கடல் வழிப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அந்தக் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மும்பையில் உள்ள கடற்படைத் தளத்தில் இதற்கான பிரிவு உபசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் பங்கேற்றதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐஎன்எஸ் நிர்பிக்' கப்பலானது கடந்த 1987-ஆம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டது. அதற்கு அடுத்த இரு ஆண்டுகளில் 'ஐஎன்எஸ் நிர்கத்' இணைக்கப்பட்டது. கடந்த 2001-ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த போர்ப் பதற்றத்தின்போது அவ்விரு கப்பல்களும் குஜராத் கடற்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டன. 'ஆபரேஷன் பரக்ராம்' என அழைக்கப்படும் அந்த பாதுகாப்புப் படை நடவடிக்கையில் 'ஐஎன்எஸ் நிர்பிக்' மற்றும் 'ஐஎன்எஸ் நிர்கத்' முக்கியப் பங்காற்றியது நினைவுகூரத்தக்கது.
அதேபோன்று கார்கில் போரின்போது முன்னெடுக்கப்பட்ட 'ஆபரேஷன் விஜய்' செயல் திட்டத்திலும் அந்தக் கப்பல்கள் இடம்பெற்றிருந்தன.