காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்த இலங்கைக்கு இந்தியா ரூ.287 கோடி நிதி

இலங்கையிலுள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு ரூ.287 கோடி (45.27 மில்லியன் டாலர்) நிதியுதவியை இந்தியா அளித்துள்ளது.

இலங்கையிலுள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு ரூ.287 கோடி (45.27 மில்லியன் டாலர்) நிதியுதவியை இந்தியா அளித்துள்ளது.
இதுகுறித்து கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு இந்தியா ரூ.287 கோடி நிதியுதவி அளிக்கிறது. இதுதொடர்பாக தில்லியில் இலங்கை நிதியமைச்சகத்துக்கும், இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கிக்கும் இடையே கடந்த 10-ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தத் திட்டமானது, காங்கேசன்துறை துறைமுகமானது வர்த்தக ரீதியிலான துறைமுகமாக முழுவீச்சில் செயல்படுவதற்கு உதவியாக இருக்கும். இப்பிராந்தியத்தில் கடல்பாதையில் புகழ்பெற்ற தளமாகும் நோக்கில் இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளை இது மேலும் வலுப்படுத்தும். இலங்கையின் வடக்குப் பகுதியில் மறுகட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பாக கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம் தவிர, இந்திய உதவியுடன் 6 புனரைமைப்புப் பணிகள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் வளர்ச்சிப் பணிக்கு உதவ வேண்டும் என்று இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டை, இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகியிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளிப்படுத்தியுள்ளது என்று இந்தியத் தூதரகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு, காங்கேசன்துறை துறைமுகம் இலக்கானது. இதையடுத்து, அந்த துறைமுகத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணம் பகுதியை, இலங்கையின் பிற பகுதிகளுடனும், இந்தியாவுடனும் இணைக்கும் முக்கிய இடமாக காங்கேசன்துறை துறைமுகம் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com