குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் வரும் 23-ஆம் தேதி பொறுப்பேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் பேரவையின் தாற்காலிகத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் எனக் கூறப்படுகிறது.
அண்மையில் நடைபெற்ற குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 6-ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. தீவிர பிரசார வியூகங்களை வகுத்தும் காங்கிரஸ் கட்சி 77 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி மூன்றாம் வாரம் நடைபெறும் எனத் தெரிகிறது. அதற்கான தேதி அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அந்தக் கூட்டத் தொடரின் போதுதான் புதிய சட்டப் பேரவைத் தலைவர் தேர்ந்தெடுக்கபடுவார்.