தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்வதை தடுக்கும் சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அதில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து பரிந்துரைக்க ஒரு குழுவை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்வதை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126-ஆவது பிரிவு தடை செய்கிறது. தற்போது தகவல் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், அவற்றை எதிர்கொள்ளும் வகையில் மேற்கண்ட சட்டத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே, அந்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்காக, துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், சட்ட அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம், பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா, தேசிய ஒளிபரப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவானது, அடுத்த 3 மாதங்களில் தனது அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.