மதக் கலவரத்தைத் தூண்டும் அமைப்புகளை தடை செய்ய ஆலோசித்து வருவதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
தென்கன்னட மாவட்டம், மங்களூரு மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கர்நாடகத்தில் தென் கன்னட மாவட்டத்தில் சில அமைப்புகள் மதக் கலவரத்தை தூண்டிவிட்டு, சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்றன. அதுபோன்ற அமைப்புகளைக் கண்டறிந்து தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். எந்த அமைப்பாக இருந்தாலும், மக்களுக்கு அச்சத்தை ஏற்படும் வகையில் செயல்படுவதை அனுமதிக்க மாட்டோம்.
பயங்கரவாதச் செயல்களில் யார் ஈடுபட்டாலும், அவர்களைப் பயங்கரவாதிகள் என்றே அழைக்க முடியும்.
பாஜக மக்களவை உறுப்பினர் பிரதாப் சிம்ஹா மதக் கலவரங்களைத் தூண்டும் வகையில் பேசிவருகிறார். ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தள் அமைப்புகளை முதல்வர் சித்தராமையா பயங்கரவாத அமைப்புகள் என கருத்துத் தெரிவித்துள்ளார்.
மதக் கலவரங்களைத் தூண்டும் பணியில் ஈடுபடுவதால், அவர்களை அப்படி அழைப்பதில் தவறில்லை. மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்க யார் முயன்றாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.