மறைந்த சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி (ஜன.12), அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர்.
சுட்டுரையில் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், 'இந்த தினத்தையொட்டி, சுவாமி விவேகானந்தருக்கு சிரம்தாழ்த்தி மரியாதை செலுத்துகிறேன். தேசிய இளைஞர் தினமான இன்று, புதிய இந்தியாவைக் கட்டுவிக்கும் இளம் தலைமுறையினரின் ஆர்வம், ஈடுஇணையற்ற சக்தி ஆகியவற்றுக்கும் வணக்கம் செலுத்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், 'சுவாமி விவேகானந்தருக்கு அவரது பிறந்த தினம், தேசிய இளைஞர் தினத்தையொட்டி நான் மரியாதை செலுத்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட பதிவில், 'நாட்டின் இளம் தலைமுறையினருக்கு சிரம்தாழ்த்தி மரியாதை செலுத்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
விவேகானந்தர், கொல்கத்தாவில் கடந்த 1863ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி பிறந்தார். தனது 39ஆவது வயதில், கடந்த 1902ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.
அவரது பிறந்த தினம், ஆண்டுதோறும் மத்திய அரசால் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.