காவிரி ஆற்றுநீரை தமிழகத்துக்குத் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதம் குறித்து புதுதில்லிக்கு சென்றுள்ள முதல்வர் சித்தராமையாவிடம் சனிக்கிழமை செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:- காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருக்கிறார். காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கர்நாடக அணைகளில் போதுமான தண்ணீர் கையிருப்பு இல்லை. குடிநீருக்கு என்ன செய்வது என்ன யோசித்துகொண்டிருக்கிறோம். காவிரி ஆற்றுநீர் பங்கீடு தொடர்பாக தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகள் மீதான தீர்ப்பை அடுத்த மாதம் உச்சநீதிமன்றம் வெளியிட இருக்கிறது. இந்த நிலையில் காவிரி ஆற்றுநீரை தமிழகத்திற்கு அளிக்கவேண்டிய அவசியம் கர்நாடகத்துக்கு இல்லை. எனவே, காவிரி நீரை தமிழகத்துக்குத் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை என்றார்
அவர்.