பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு, கன்னட நடிகரும், எம்எல்ஏவுமான அம்பரீஷ் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் ஒன்றை எழுதினார். இந்த கடிதம் குறித்து தில்லியில் பதில் அளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா தங்களுக்கே நீர் பாற்றாக்குறை இருப்பதால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கூறினார்.
இந்நிலையில் கன்னட முன்னாள் நடிகரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அம்பரீஷ் மாநில முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில்லை என்ற உங்களின் முடிவினை வரவேற்கிறேன். எக்காரணம் கொண்டும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கூடாது. தண்ணீர் கேட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருப்பதை எல்லாம் பொருட்படுத்த வேண்டாம்
தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில்லை என்ற இதே நிலைப்பாட்டில் திடமாக இருக்க வேண்டும். இதற்கு போதிய ஆதரவை நானும் கர்நாடக விவசாய சங்கங்களும் அளிக்கத் தயார்.
கர்நாடகத்தில் நிலவும் வறட்சியை சமாளிக்கவே போதிய தண்ணீர் இல்லாத போது, தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் தர முடியும்? அணைகளில் இருக்கும் தண்ணீரை பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கும், கர்நாடக விவசாயிகளின் பயிர் சாகுபடிக்கும் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அம்பரீஷ் தனது கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.