இந்தியாவில் 12 எண்கள் அடங்கிய தனிமனித அடையாளம் தொடர்பான ஆதார் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் தனிநபர் ஒருவரின் அனைத்து அடையாளங்களும் சேகரிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆதார் விவரங்களை வங்கிக் கணக்கு எண், தொலைபேசி எண் உள்ளிட்டவைகளுடன் மார்ச் 31-ந் தேதிக்குள் இணைக்க அவசியமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆதாரில் சேகரிக்கப்பட்ட தனிமனித விவரங்கள் அனைத்தும் திருடப்பட்டுவிட்டதாக அவ்வப்போது புகார்கள் எழத்தொடங்கியுள்ளது. இதனால் பல போலியான அடையாள விவரங்கள் உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், மத்திய அரசு இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும் ஆதார் தொடர்பான அனைத்து விவரங்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆதார் தொடர்பான விவகாரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்விகார், ஆதர்ஷ் குமார் சிக்ரி, டி.ஒய்.சந்திரசுத், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
இதில், மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷாம் திவான் ஆஜராகி வருகிறார். அப்போது, ஆதார் திட்டத்துக்காக தனிமனிதர்களின் அடையாளங்கள் எடுக்கப்படுவது தவறானதாகும். இது மனித உரிமைகளை கொன்று விடுகிறது என்று புதன்கிழமை நடந்த விசாரணையின் போது வாதாடினார்.