இந்திய ராணுவத்துக்கு ரூ.3,547 கோடி மதிப்பில் துப்பாக்கிகள் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக வட்டாரத் தகவல்கள் கூறியதாவது: தில்லியில் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டம், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இந்திய ராணுவத்துக்கு தாக்குதல் ரக ரைபிள் துப்பாக்கிகள், கார்பின் ரக துப்பாக்கிகள் ஆகியவற்றை ரூ.3,547 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த கொள்முதலை, எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் வீரர்களுக்காக விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதன்படி, 72 ஆயிரம் தாக்குதல் ரக ரைபிள் துப்பாக்கிகளும், 93,895 கார்பின் ரக துப்பாக்கிகளும் கொள்முதல் செய்யப்பட இருக்கின்றன.
இந்திய ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளிடம் நிலவும் ஆயுதப்பற்றாக்குறைக்குத் தீர்வு காணும் வகையில், இந்த கொள்முதல் மேற்கொள்ளப்படுகிறது என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.