ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நேரு பூங்கா அருகே ஷேக் முகமது அன்ட் சன்ஸ் என்ற பதிப்பகத்தின் கீழ் இயங்கும் குல்ஷான் புக்ஸ், வியாழக்கிழமை 2018-ம் ஆண்டுக்கான லிம்கா சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அம்மாநிலத்தில் இயங்கி வரும் ஒரே பதிப்பகம் மற்றும் புத்தக சாலையான இங்கு சுமார் 80,000 புத்தகங்கள் வரையில் வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இங்கு வாசிப்பு அறை மற்றும் கஃபே எனப்படும் தேநீர் விடுதியும் செயல்பட்டு வருகிறது.
இதனால் இந்த பதிப்பகத்துக்கு வரும் வாசகர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி எத்தனை நேரம் வேண்டுமானலும் இங்குள்ள புத்தகங்களை வாசிக்கலாம். மேலும் தேநீர் விடுதியை பயன்படுத்துகின்றனர். இங்கு தேநீர் மற்றும் காஃபி என இரண்டும் விற்கப்படுகிறது.
இதுகுறித்து இப்பதிப்பகத்தின் தற்போதைய தலைவர் ஷேக் அஜாஸ் கூறுகையில்:
என்னுடைய முப்பாட்டனார் இந்த பதிப்பகத்தை ஆரம்பித்தார். கடந்த 90 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் இந்த பதிப்பகத்தை நிர்வகித்து வருகிறோம்.
இதில் நான் 5-ஆம் நிர்வாகியாவேன். இங்கு காஷ்மீரைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர்கள் பலரது புத்தகங்கள் உள்ளன. லிம்கா சாதனை அங்கீகாரம் எங்களுக்கு கிடைத்த கௌரவம் என்றார்.
இந்நிகழ்வு எங்கள் அனைவருக்குமான கௌரவம். இந்த பதிப்பகத்தில் தான் காஷ்மீர் பள்ளத்தாக்கு தொடர்பான பல தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பதிப்பகம் என்னைப் போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு சிறந்த உறுதுணையாக விளங்குகிறது என்று உள்ளூர் எழுத்தாளர் ஃபர்மாம் அலி தெரிவித்துள்ளார்.