உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையேயான விவகாரம்: பத்திரிகைகளுக்கு தடை விதிக்க தலைமை நீதிபதி மறுப்பு!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையேயான கருத்து வேற்றுமை விவகாரம் குறித்து செய்தி வெளியிட, பத்திரிகைகளுக்கு தடை விதிக்க கோரிய மனு மீது உத்தரவிட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மறுத்து விட்டார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையேயான விவகாரம்: பத்திரிகைகளுக்கு தடை விதிக்க தலைமை நீதிபதி மறுப்பு!

புதுதில்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையேயான கருத்து வேற்றுமை விவகாரம் குறித்து செய்தி வெளியிட, பத்திரிகைகளுக்கு தடை விதிக்க கோரிய மனு மீது உத்தரவிட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மறுத்து விட்டார்.

உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளான செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசஃப் ஆகியோர் தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென்று செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தனர். அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகள் குறித்து அவர்கள் மறைமுகமாகக் குற்றம்சாட்டினர்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சம் காட்டுவதாகவும், மூத்த நீதிபதிகளான தங்களைத் தாண்டி வேறு நீதிபதிகளுக்கு வழக்குகளை அவர் ஒதுக்குவதாகவும் அவர்கள் கூட்டாக குறைகூறினர்.

"உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. நிர்வாகம் சரியில்லை. கடந்த சில மாதங்களில் பல்வேறு விரும்பத்தகாத விஷயங்கள் நடைபெற்றுள்ளன' என்று நீதிபதி செலமேஸ்வர் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து இதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதாகவும், எனினும் தங்கள் முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு அவர்கள் சில மாதங்களுக்கு முன் எழுதிய கடிதத்தையும் அந்த செய்தியாளர் சந்திப்பில் செலமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதிபதிகளும் வெளியிட்டனர்.  உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்துள்ள மூத்த நீதிபதிகளின் இந்த மோதல் போக்கு, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த செவ்வாயன்று தனது செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா செவ்வாயன்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். தலைமை நீதிபதியின் சேம்பரில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்பொழுது இந்த பிரச்னையை மேற்கொண்டு வளர்க்க விரும்பவில்லை என்றும், இதற்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் எடுத்துரைத்ததாக உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையேயான கருத்து வேற்றுமை விவகாரம் குறித்து செய்தி வெளியிட, பத்திரிகைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் உடனடியாக இந்த விவகாரத்தில் தடை விதித்து உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்த தலைமை நீதிபதி, இந்த மனுவானது முறையாக விசாரணைக்கு பட்டியலிடப்படும் பொழுது விசாரிப்பதாகத் தெரிவித்தார்.

முன்னதாக மீண்டும் நான்கு மூத்த நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது சேம்பரில் பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்றும் நடைபெறுவதாக இருந்த இந்த கூட்டமானது நீதிபதி செல்லமேஸ்வர் உடல்நலக் குறையால் விடுமுறை எடுத்ததால் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்களது.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com