கொல்காத்தாவில் சர்வதேச சிறுவர் திரைப்பட விழா வெள்ளிக்கிழமை (ஜன. 19) முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கொல்கத்தாவில் 7-ஆவது ஆண்டாக நடைபெறவிருக்கும் சர்வதேச சிறுவர் திரைப்பட விழா வெள்ளிக்கிழமை தொடங்கி 9 நாள்களுக்கு நடைபெறும்.
உலகம் முழுவதும் உள்ள 33 நாடுகளில் இருந்து சிறுவர் திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படவுள்ளன.
இதுகுறித்து இந்த விழாவை நடத்தும், அரசுக்குச் சொந்தமான சிசு கிஷோர் அகாதெமி கூறுகையில், குழந்தைகளின் அறிவுப் பசிக்குத் தீனி போடும் வகையில், நட்பு, வயது வளர்ச்சி, வன விலங்குகளின் வாழ்க்கை போன்ற பல்வேறு கருக்களை மையமாகக் கொண்ட படங்கள் திரையிடப்படவுள்ளதாகத் தெரிவித்தது.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான், கஜகஸ்தான் உள்ளிட்ட 32 வெளிநாட்டு திரைப் படங்களும், இந்தியாவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களும் கொல்கத்தாவின் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளன.
மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் முயற்சியில், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இந்த சர்வதேச சிறுவர் திரைப்பட விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.