ராஞ்சி: ஊழல் வழக்கு ஒன்றில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவுக்கு சிறை தண்டனை வழங்கிய சிபிஐ நீதிபதி ஒருவர், தனது குடும்பத்துடன் துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது.
அரசு கருவூலத்தில் இருந்து பண மோசடி செய்ததாக, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் , பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் கடந்த 6-ஆம் தேதியன்று லாலுவுக்கு ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால் சிங் மூன்றரை ஆண்டுகள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் சிபிஐ நீதிபதி ஷிவ்பால் சிங், தனது குடும்பத்துடன் துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது. அவர், அவரது மகன் மற்றும் மகள் ஆகிய மூவரும் துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
அவர்கள் மூவரது விண்ணப்பங்களும் பரிசீலனையில் உள்ளதாக ராஞ்சி காவல்துறை தெரிவித்துள்ளது. லாலுவுக்கு தீர்ப்பு வழங்கியதன் எதிர் வினைகள் எதுவும் இருக்கலாம் என்று எண்ணியே, நீதிபதி குடும்பத்தினர் துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.