புதுதில்லி: சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது எங்கள் வேலை அல்ல; அது மாநிலங்களின் பணி என்று 'பத்மாவத்' திரைப்படம் தொடர்பான புதிய வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஷர்மா என்பவர் வெள்ளியன்று பொதுநல மனு ஒன்றினைத் தொடர்ந்தார். அதில் சர்ச்சைக்குரிய பாலிவுட் திரைப்படமான 'பத்மாவத்' படத்திற்கு வழங்கப்பட்டுள்ள மத்திய தணிக்கை வாரியச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்றும் , அவ்வாறு இல்லாமல் படம் திரையிடப்பட்டால் அதன் மூலமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அத்துடன் இந்த மனுவினை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கானது இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிமன்றம் தெரிவித்ததாவது:
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது எங்கள் வேலை அல்ல; அது மாநிலங்களின் பணி. எனவே இந்த மனுவினை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் இதே திரைப்படம் தொடர்பாக நானகு மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் வியாழன் அன்று பிறப்பித்த உத்தரவு தொடர்பாகவும் அவர்கள் விரிவாகக் குறிப்பிட்டிருந்தனர்.