சர்ச்சைக்குரிய பத்மாவத் திரைப்படத்தை முஸ்லிம்கள் பார்க்கக் கூடாது என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி தெரிவித்தார்.
இதுகுறித்து தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அந்தப் படத்தை பார்ப்பதற்கு முஸ்லிம்கள் போகக் கூடாது. 2 மணி நேர திரைப்படத்தை காண்பதற்காக கடவுள் முஸ்லிம்களைப் படைக்கவில்லை. அந்தப் படத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி, 12 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். ஆனால், முத்தலாக் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சட்டம் உருவாக்கப்பட்டபோது, அதுதொடர்பாக முஸ்லிம்களிடம் யாரும் ஆலோசனை நடத்தவில்லை. பத்மாவத் திரைப்படத்தை வெளியிடாமல் தடுப்பதற்கு ராஜபுத்திர இனத்தவர் போராடி வருகின்றனர்.
இந்தத் திரைப்பட விவகாரத்தில், ராஜபுத்திர இனத்தவர்களிடம் இருந்து முஸ்லிம்கள் பாடம் கற்க வேண்டும் என்றார் ஒவைஸி.
ஷபனா ஆஸ்மி கோரிக்கை: இதனிடையே, சுட்டுரையில் மூத்த நடிகை ஷபனா ஆஸ்மி வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பத்மாவத் திரைப்படம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். ஆனால், இதில் தீர்க்கப்படாத பிரச்னைகளும் உள்ளன. அதாவது அந்தப் படத்தில் நடித்த தீபிகா படுகோன் தலைக்கு வெகுமதி அறிவித்தது, தீயிட்டு எரிக்க மிரட்டல் விடுத்தது, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு மிரட்டல் விடுத்தது ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. அவ்வாறு மிரட்டல் விடுத்தவர்கள் அனைவரும் சுதந்திரமாக உலவுகின்றனர். அவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அப்போதுதான் நீதி கிடைத்ததாக கருதப்படும் என்று அந்தப் பதிவுகளில் ஷபனா ஆஸ்மி குறிப்பிட்டுள்ளார்.