நாட்டில் உள்ள பெரு நிறுவனங்களின் தகவல்கள் அனைத்தும் இணையதளம் மூலம் பொதுமக்களுக்கு கிடைத்து வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சராகவும் உள்ள ஜேட்லி, தனது அமைச்சகத்தின் சார்பில் தேசிய அளவில் செயல்படும் பெரு நிறுவனத் தகவல்கள் தொடர்பான இணையதளத்தை தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
நிறுவனங்களின் செயல்பாடுகள், நிதி நிலை உள்ளிட்ட விவரங்கள் ஏற்கெனவே இணையதளங்கள் மூலம் மக்களுக்கு கிடைத்து வருகின்றன. இப்போது புதிதாகத்
தொடங்கப்பட்டுள்ள இந்த இணையதளம் மூலம் பெரு நிறுவனங்களின் செயல்பாடுகளை எவ்வித ஒளிவுமறைவும் இன்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த நிறுவனமும் பாரபட்சமாக செயல்பட முடியாது.
மேற்கத்திய நாடுகளைப்போல அல்லாமல், இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் என்பவை சமுதாயம் சார்ந்து செயல்படுவையாக உள்ளன.
நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வு நிதி ஒதுக்குவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2014-15-ஆம் ஆண்டில் 5,870 நிறுவனங்கள் ரூ.9,553.72 கோடியை சமூகப் பொறுப்புணர்வு நிதியாக அளித்துள்ளன. 2015-16-ஆம் ஆண்டில் 7,983 நிறுவனங்கள் ரூ.13,625.24 கோடியை ஒதுக்கியுள்ளன என்றார் அவர்.