புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம் பிராகஷ் ராவத், தேர்தல் ஆணையராக அசோக் லாவாஸா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிக்கும் அச்சல் குமார் ஜோதி (வயது 65), விரைவில் ஓய்வுபெற உள்ளார். அவரது பதவிக் காலம் முடிவடைய உள்ளதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டிசம்பர் 2, 1953-ல் பிறந்த ராவத், 1977-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக மத்தியப் பிரதேசத்தில் இருந்து தேர்வானார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு பதவிகளை நிர்வகித்துள்ளார்.
இதுவரை இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவராக இருந்து வந்த ராவத், தற்போது தலைமை தேர்தல் ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
எனவே, 3 இந்திய தேர்தல் ஆணையர்கள் பதவியில் ஒன்று காலியானதால் அப்பதவிக்கு முன்னாள் பொருளாதார செயலர் அசோக் லாவாஸா நியமிக்கப்பட்டுள்ளார். 1980-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக ஹரியாணாவில் இருந்து நியமிக்கப்பட்டவர் ஆவார்.
இந்நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம் பிராகஷ் ராவத், தேர்தல் ஆணையராக அசோக் லாவாஸா ஆகியோர் வருகிற ஜனவரி 23-ந் தேதி பதவியேற்கவுள்ளனர்.