அதிகார வர்த்தகத்தினரை மட்டுமே பிரதமர் மோடி ஆரத்தழுவி அரவணைக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். விவசாயிகள், சாமானியர்களை பிரதமர் கண்டுகொள்வதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச நாடுகளைச் சேர்ந்த தலைவர்களையும், பிரதிநிதிகளையும் ஆரத்தழுவி வரவேற்பது பிரதமரின் வழக்கமாகும். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முதல் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரை அனைத்து தலைவர்களிடம் அவ்வாறே பிரதமர் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், மோடியின் இந்தச் செயல்பாட்டை ராகுல் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:
தம்மை ஒரு சாமானிய மனிதர் என்றே பிரதமர் மோடி குறிப்பிட்டு வருகிறார்.
அதனால்தான் மரபுகளை மீறி சர்வதேசத் தலைவர்களை விமான நிலையத்துக்கே நேரில் சென்று அவர் அரவணைத்து வரவேற்கிறாரோ என்னவோ? எவ்வாறாயினும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத்தான் அந்த மரியாதையை அவர் அளிக்கிறார்.
மாறாக, விவசாயிகளையும், சாமானியர்களையும், ராணுவ வீரர்களையும் பிரதமர் மோடி ஆரத்தழுவுவதில்லை என்று அதில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.