உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க ஸ்விட்சர்லாந்து சென்றடைந்தார் மோடி
ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற உள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அந்நாட்டின் ஜூரிச் நகரைச் சென்றடைந்தார்.
உலகப் பொருளாதார மாநாடு டாவோஸ் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் 70 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்), உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) ஆகியவற்றின் தலைவர்களும், 38 பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களும் இதில் பங்கேற்கின்றனர். செவ்வாய்க்கிழமை நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார்.
மேலும், சர்வதேச நாடுகளின் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் ஆகியோருடன் அவர் கலந்துரையாட உள்ளார். முன்னதாக, டாவோஸில் உலக அளவிலான நிறுவனங்களின் தலைவர்களுக்கு மோடி திங்கள்கிழமை இரவு விருந்து அளித்தார்.
இதனிடையே, மோடியின் உரையைக் கேட்பதற்கு உலகத் தலைவர்கள் காத்திருக்கும் நிலையில், இந்தியா மீது பொருளாதார ரீதியில் முன்வைக்கப்படும் புகார்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாநாட்டில் பிரதமர் ராஜதந்திர ரீதியில் செயல்பட வேண்டும் என்று நம் நாட்டு தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, உலகப் பொருளாதார மாநாட்டில் தாம் பங்கேற்பது குறித்து சுட்டுரையில் (டுவிட்டர்) 'இந்தியா என்றால் தொழில்' என்ற தலைப்பில் மோடி வெளியிட்டிருந்த பதிவுகளில் கூறியிருப்பதாவது:
சர்வதேசப் பொருளாதாரத்துக்கு எதிர்காலத்தில் இந்தியா எத்தகைய பங்களிப்பை அளிக்க இருக்கிறது என்பது குறித்து டாவோஸில் நடைபெற இருக்கும் உலகப் பொருளாதார மாநாட்டில் பேச இருக்கிறேன். அங்கு ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களையும் சந்திக்க இருக்கிறேன். இந்த சந்திப்புகள் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பல்வேறு நலன்களைப் பெற்றுத் தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இப்போது சர்வதேசப் பொருளாதாரம் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. அதே நேரத்தில் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்று பல்வேறு சர்வதேச அமைப்புகளும் கணிப்புகளை வெளியிட்டுள்ளன என்று மோடி தனது பதிவுகளில் குறிப்பிட்டிருந்தார்.