மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. பின்னர் 2-ஆம் கட்டமாக மார்ச் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 6- தேதி வரை நடைபெறுகிறது.
இதில் பிப்ரவரி 1-ந் தேதி தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் ஆகும். எனவே இதில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது சில முக்கியப் பிரச்னைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப எதிர்கட்சியான காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
அதன்படி அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல், வியாழக்கிழமை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது இந்த கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் கட்சியினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது போன்ற முடிவுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் முக்கியமான பட்ஜெட் கூட்டத் தொடராகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, இதில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் விலையேற்றம், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு விவகாரத்தால் ஏற்பட்டுள்ள நிலை, கறுப்பு பண மீட்பு நடவடிக்கை உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.