ஜெய்ப்பூர்: தங்கள் எதிர்ப்பையும் மீறி ராணி பத்மாவதி பற்றிய 'பத்மாவத்' படத்தினை இயக்கிய இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் தாயாரைப் பற்றி படமெடுக்கப் போவதாக கர்னி சேனை அமைப்பு அறிவித்துள்ளது.
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் சித்தூர் ராணி பத்மாவதியின் வாழ்க்கை சம்பவங்களைப் பற்றிய 'பத்மாவத்' என்னும் திரைப்படத்தினை சமீபத்தில் இயக்கி வெளியிட்டார். அந்த திரைப்படத்தில் பத்மாவதியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, படம் வெளிவருவதற்கு முன்பாகவே பலத்த போராட்டங்கள் எழுந்தன.
பின்னர் கடும் போராட்டங்களுக்கு பிறகு படம் நேற்று வெளியாகியுள்ளது. இதன் காரணமாக வட மாநிலங்களில் ஆங்காங்கே போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தங்கள் எதிர்ப்பையும் மீறி ராணி பத்மாவதி பற்றிய 'பத்மாவத்' படத்தினை இயக்கிய இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் தாயாரைப் பற்றி படமெடுக்கப் போவதாக கர்னி சேனை அமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஸ்ரீ ராஜபுத்ர கர்னி சேனை அமைப்பின் ஜெய்ப்பூர் மாவட்ட தலைவரான கோவிந்த் சிங் கங்கரோத் என்பவர் சித்தூர்கார் என்னுமிடத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நாங்கள் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் தாயாரைப் பற்றி படமெடுக்கப் போகிறோம். அந்தப் படத்திற்கு 'லீலாவின் லீலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தினை அர்விந்த் வியாஸ் என்பவர் இயக்கவுள்ளார். படத்திற்கான திரைக்கதை எழுதும் பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டது.
வரும் 15 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து படமானது பூஜையுடன் துவங்கப்படும். ஒரு வருடத்திற்குள் படம் நிறைவு பெற்று வெளியிடப்படும். படம் முழுக்க ராஜஸ்தானிலேயே எடுக்கப்பட உள்ளது.
பன்சாலி எங்களது தாயாரை (பத்மாவதி) தனது படத்தின் மூலம் அவமானப்படுத்தி விட்டார். ஆனால் நாங்கள் எடுக்கப் போகும் படமானது அவர் பார்த்து பெருமைப் படும் அளவிலிருக்கும்.
நமது நாட்டில் அனைவருக்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை கொடுக்கப்பட்டு இருப்பதால், அதனை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்தப் போகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.